தஞ்சாவூர், செப்.2 - வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், உலக தென்னை நாள் விழாவையொட்டி நடைபெற்ற கண்காட்சியில் சிறந்த விவசாயிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தென்னை ஆராய்ச்சி நிலையம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில், உலக தென்னை நாள் விழாவையொட்டி, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் தென்னை விவசாயிகளுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் பெ.ஐரின் வேதமணி தலைமை வகித்தார். வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் நா.முத்துக்குமரன் வரவேற்றார். தென்னை ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் இரா.அருண்குமார் தொடக்க உரையாற்றினார். இதில், தஞ்சாவூர் தோட்டக்கலை இணை இயக்குநர் வெங்கட்ராமன், பட்டுக்கோட்டை உதவி செயற்பொறியாளர் ஆ.செங்கோல், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நிர்வாக குழு இயக்குநர் கோ.ரெத்தினகுமார், பாராசூட் கல்பா விருக்சா அறக்கட்டளை வி.அருண், தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர் பண்ணவயல் ரெ.இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர்கள் ந.செந்தில்குமார், மா.விஜயப்பிரியா, வி.ஹேமா ஆகியோர் தென்னை சார் தொழில்நுட்ப உரையாற்றினர். இணைப் பேராசிரியர் ம.சுருளிராஜன் நன்றி கூறினார். இந்நிகழ்வில், தென்னை விவசாயத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் விவசாயிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் குறைந்த செலவில் தென்னை வளர்ப்பு குறித்து அதிகாரிகள் தென்னை விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர். பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் பங்கேற்றனர்.