அறந்தாங்கி, பிப்.16- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கோட்டைப்பட்டினத்தில் இந்திய தொழிற்சங்க மையம்(சிஐடியு) பேரவை சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிஐடியு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கரூ. இராமநாதன் தலைமை வகித்தார். ஒன்றிய துணை ஒருங்கிணைப்பாளர்கள் மனோகரன், சந்தியாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட துணை செயலாளர் சி.மாரிக்கண்ணு துவக்கி வைத்துப் பேசினார். கூட்டத்தில் தொழிலாளர் நல வாரியத்தில். பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை தாமதிக்காமல் வழங்க வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்ட மசோதாவை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதம் தோறும் மீனவர் குறைதீர் கூட்டம், மீனவர்கள் வசிக்கும் பகுதியிலேயே நடத்த வேண்டும். நெல்லுக்கான ஆதார விலை ரூ5 ஆயிரம் வழங்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் இந்த பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. பேரவை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக கரு. இராமநாதன், ஒன்றிய துணை ஒருங்கிணைப்பாளர்களாக மனோகரன், சந்தியாகு மற்றும் 12 பேர் கொண்ட குழுவினரை அறிமுகம் செய்து கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ. ஸ்ரீதர் பேசினார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சி. அன்புமணவாளன், அனைத்து போக்குவரத்து சிஐடியு ரெத்தினவேல், மாவட்ட கட்டுமான சங்கப் பொறுப்பாளர் முகம்மதுகனி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என். காளிதாசன், சிறு பான்மை நலச் சங்கத் தலைவர் வி. ரபீக்கான் உள்ளிட்டோர் பேரவை கூட்டத்தில் பேசினர்.