கரூர், நவ.23 - கரூர் மாவட்டம், சேலம் பைபாஸ் சாலையில் உள்ள பரணி பார்க் கல்விக் குழுமத்தில் “சாமியப்பக் கவுண்டர் நினைவு அறிவியல் கண்காட்சி” பள்ளி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இக்கண்காட்சியில் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, அறிவியல் தத்துவங்களை எளிய முறையில் விளக்கும் ஆய்வுகள் உட்பட 350 அறிவியல் படைப்புகள் மற்றும் ஆய்வுகளை 1820 இளம் அறிவியல் விஞ்ஞானிகள் காட்சிப்படுத்தினர். அறிவியல் கண்காட்சிக்கு பரணி கல்விக் குழுமத் தாளாளர் எஸ்.மோகனரங்கன் தலைமையேற்று, அறிவியல் கண்காட்சி, ஓவியக் கண்காட்சி, நம்மாழ்வார் மூலிகைத்தோட்டம் ஆகியவற்றைத் துவக்கி வைத்து பேசினார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளம் மாணவர்களிடையே குழு உணர்வு, தலைமை பண்பு, அறிவியல் மனப்பான்மை, ஆங்கிலத்தில் பேசும் திறன் ஆகியவற்றை வளர்க்கும் வகையில் சாமியப்பக் கவுண்டர் நினைவு அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு நமது பாரம்பரிய மூலிகைச் செடிகள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டு, முதற்கட்டமாக பள்ளி வளாகத்தில் 54 வகையான மூலிகைச் செடிகளுடன் மூலிகைத் தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் வியப்பூட்டும் அறிவியல் அரங்குகள், பாரம்பரிய உணவுக் கொண்டாட்டம், 2000 ஆண்டு பழமையான தமிழியல் பெயர் எழுதும் அரங்கு, ஜப்பான் பண்பாட்டு அரங்கம், மாணவர் ஓவியம் மற்றும் கலைப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணியன் தலைமையில், பரணி வித்யாலயா முதல்வர் எஸ்.சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் கே.சேகர், எம்.குமாரசாமி, கல்வியியல் கல்லூரி முதல்வர் பி.சாந்தி, துணை முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.