districts

img

திருவாரூரில் மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

திருவாரூர், பிப்.14-  திருவாரூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன், முதல்வர் திட்ட முகாம், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச் சந்திரன், முன்னிலையில், தமிழ்நாடு உயர்க்கல்வித்துறை அமைச்சர் முனைவர். கோவி. செழியன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் தலைவர் உ. மதிவாணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் யு. கருண்கரட் ஆகியோர் உடனிருந்தனர்.  இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசானது, தற்பொழுது மூன்றாம் கட்டமாக மக்களுடன் முதல்வர் முகாம் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. முகாமில், 15 துறைகளைச் சேர்ந்த 44 சேவைகளை பொதுமக்களுக்கு விரைவாக வழங்கிடும் பொருட்டு, இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  முகாமில் பொதுமக்களின் மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் போது, மனுவின் நிலையினை அறிந்து கொள்ளும் வகையில் பயனாளிகளின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இம்முகாம் உங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகும். உங்கள் இருப்பிடம் தேடியே அரசு வந்துள்ளது. இந்த முகாம்களில் கலந்து கொள்பவர்கள் தங்களது வீடுகளுக்கு சென்றவுடன் அருகில் வசிப்பவர்களிடம் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் குறித்து எடுத்துச் சொல்லி, அவர்களின் தேவைகளை மனுவின் வாயிலாக அளிக்கச் சொல்லுங்கள். உடனடியாக தீர்வுகாணும் வகையில் உள்ள கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுவருகிறது என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.  திருவாரூர் மாவட்டத்தில், வியாழக்கிழமையன்று மன்னார்குடி வட்டம், பழையனூர் கிராம பஞ்சாயத்திற்கான முகாமிலும், மஞ்சனவாடி-திருராமேஸ்வரம் கிராம பஞ்சாயத்திற்கான முகாம், திருராமேஸ்வரத்திலும் என மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து இடங்களிலும் நடைபெற்றது. முகாமினை, உயர்க்கல்வித்துறை அமைச்சர் முனைவர்.கோவி. செழியன் நேரில் பார்வையிட்டார். 1655 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், கூடூர் முத்துவள்ளி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 46 நபர்களுக்கு ரூ.46,82,800-மதிப்பிலும் மற்றும் துறைவாரியாக பல்வேறு நலத்திட்டங்களையும் அமைச்சர் முனைவர்.கோவி. செழியன் வழங்கினார்.