ஜகபர்அலி கொலை வழக்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை
புதுக்கோட்டை, பிப்.4- ஜகபர்அலி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரிடம் புதுக்கோட்டையில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள வெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர்அலி, கனிமவளக் கொள்ளைக்கு எதிராகக் குரல் எழுப்பி வந்த நிலையில், கடந்த ஜன. 17-ஆம் தேதி அவர் டிப்பர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், ஆர்ஆர் கிரஸ் உரிமையாளர்கள் ராசு(54), ராமையா(55) மற்றும் முருகானந்தம்(56), காசிநாதன்(45), தினேஷ்(24) ஆகிய 5 பேரும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பிறகு, சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு இவ்வழக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், 3 நாட்கள் காவலில் எடுத்து, விசாரணை நடத்த புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை சிபிசிஐடி போலீசார் அனுமதி பெற்றனர். புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆயுதப்படை வளாகத்தில், திங்கள்கிழமை மாலை இவர்கள் 5 பேரும் தங்க வைக்கப்பட்டனர். இரவு வரை விசாரணை நடைபெற்றுள்ளது. பிறகு மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை விசாரணை தொடங்கியது. சிபிசிஐடி திருச்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் ஜென்னிங்ஸ், புதுக்கோட்டை ஆய்வாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட சிபிசிஐடி காவல்துறையினர் இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளனர். வியாழக்கிழமை (பிப். 6) காலை இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.
நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் பயனாளிகளை சந்தித்து உரையாடிய ஆட்சியர்
மயிலாடுதுறை, பிப்.4- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம், பெருஞ்சேரி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்று வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் கணபதி மகளிர் சுய உதவிக்குழுவின் உறுப்பினர்களை “நிறைந்தது மனம்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, நேரில் சென்று இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள் தொடர்பாக, கலந்துரையாடி, அவர்களின் தேவையை அறிந்து பொருளாதாரத்தில் பெண்கள் சுயமாக வருமானம் ஈட்டி குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக, குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வாங்கியும், தையல்கடை, பெட்டிக் கடை ஆகியவை நிறுவ ரூ.6 இலட்சத்திற்கான கடன் தொகைக்கான காசோலையையும் வழங்கி, அவர்கள் ஒவ்வொருவரும் பொருளாதாரத்தில் சிறப்பாக செயல்பட்டு மேன்மையடைய மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமல்ராஜ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கீதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போதுமான அறுவடை இயந்திரங்கள் கொண்டுவர விவசாயிகள் கோரிக்கை
பாபநாசம், பிப்.4- தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா தாளடி மூன்று லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள நிலையில், நெற்கதிர்களை அறுவடை செய்வதற்கான இயந்திரங்கள் பற்றாக் குறை நிலவுகிறது. இதனால் மழை, ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளை எதிர் கொண்ட விவசாயிகள், காலத்தே விளைந்த பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் வெளி மாவட்டங்களில் இருந்து அறுவடை இயந்திரங்களை தஞ்சை மாவட்டத்திற்கு தருவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படுவதோடு, காலத்தோடு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலர் செந்தில் குமார் கூறும்போது, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, போதுமான அறுவடை இயந்திரங்களை மாவட்டத்திற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞர் கைது
தஞ்சாவூர், பிப்.4– தஞ்சாவூர் பூமால் ராவுத்தர் தெருவைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (22). இவர் மளிகைக் கடை ஒன்றில் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், 17 வயது சிறுமி ஒருவரும், சத்தியசீலனும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி, சத்தியசீலன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், சத்தியசீலன், சிறுமியுடன் ஒன்றாக இருந்ததை, செல்போனில் படம் எடுத்து வைத்துக்கொண்டு, சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். சத்தியசீலனின் மிரட்டல் தாங்க முடியாமல், சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார். இதுகுறித்து தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் அளித்தார். இதன்பேரில், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சத்தியசீலன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்தது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து, தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சத்தியசீலனை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
களியல் அருகே சிறுத்தை புகுந்ததா?
கிராம மக்கள் அச்சம்
நாகர்கோவில், பிப். 4- கிராமத்திற்குள் சிறுத்தை புகுந்ததாக அச்சமடைந்து திகைத்து நின்ற குமரி மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்களால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறுத்தை புகுந்ததாக பீதியில் உறைந்த களியல் அருகே உள்ள ஊர்மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் அங்கு சிறுத்தையை தேடினர். அப்போது, அவர்கள் கூறிய இடத்தில் இருந்த கால் தடங்களை ஆய்வு செய்ததில் அது சிறுத்தை அல்ல பெரிய அளவிலான காட்டு பூனை என கண்டறிந்து மக்களிடம் தெரிவித்தனர். இந்நிலையில், குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர அடிவார பகுதியான களியல் பகுதியை அடுத்த அருமாங்கோணம் பகுதியில் உள்ள குமரேசன் என்பவரது வீட்டில் நாய் ஒன்றை இரவு பெரிய அளவிலான மர்ம விலங்கு ஒன்று கொன்று கவ்வி சென்றுள்ளது அச்சத்தை அதிகரித்துள்ளது.