districts

தமிழ்தேச மக்கள் முன்னணி, தமிழக நிலம், நீர் பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு

மயிலாடுதுறை, ஏப்.4- தமிழக நிலம்-நீர் பாதுகாப்பு இயக்கம், தமிழ்தேச மக்கள் முன்னணி ஆகிய இரு அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் நடைபெற்றது. தமிழக நிலம்-நீர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் இரணியன், தமிழ்தேச மக்கள் முன்னணியின் மாவட்டச் செயலாளர் விஷ்ணுகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். அதில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  தமிழக நிலம்-நீர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சுந்தர், நந்தக்குமார், சி.என்.ராஜா, துரைராஜ், விஜயக்குமார், ஏ.முகமது ரிஜா, தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் சார்பில் ரகுராஜா, பிரகாஷ் உள்ளிட்டோர் உரையாற்றினர். தொடர்ந்து தமிழக நிலம்-நீர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் இரணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: இந்தியாவில் வாழ்கிற மக்கள் பன்முக தன்மைக் கொண்டவர்களாக உள்ளனர். பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும், பல்வேறு மொழிகளை பேசுபவர்களும் வசிக்கின்றனர். அதற்கேற்ற வகையில் அரசியலமைப்புச் சட்டங்களும் உள்ள நிலையில், ஆளுகிற பாரதிய ஜனதா கட்சியோ ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தேர்தல் என மக்களை அச்சுறுத்துகிறது. குறிப்பாக சிறுபான்மை மக்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்தில் வாழும் நிலையை ஏற்படுத்தியுள்ள பாஜக, இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றி வருகிறது. ஒரே கட்சி ஆட்சி முறையை கொண்டு வருவதற்காக அரசுத் துறை நிர்வாகங்களை, எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கும், அழிப்பதற்கும் முயற்சிக்கிறது. நீதித்துறை வரை அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், அரசியல் சட்டத்தை பாதுகாக்கவும், மக்கள் போராடுகிற உரிமையை பாதுகாக்கவும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகளிலும், தமிழ்த்தேச மக்கள் முன்னணி மற்றும் தமிழக நிலம்-நீர் பாதுகாப்பு இயக்கம் இணைந்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கும். மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா-வுக்கு ஆதரவாக தொகுதி முழுவதும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம். இவ்வாறு இரணியன் கூறினார்.