districts

img

புகளூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சூழ்ந்துள்ள முட்புதர்கள் உலா வரும் பாம்புகள்: குடியிருப்பு வாசிகள் அச்சம்

கரூர், பிப்.7- கரூர் மாவட்டம், புகளூர் நகராட்சி 13 வது வார்டிற்கு உட்பட்ட  ஓம் சக்தி நகர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த மருத்துவமனைக்கு 24 மணி நேரமும் விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கு நோயாளிகள் வந்து செல்கின்றனர். மேலும் கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் பல்வேறு சிகிச்சைகளுக்காக தினமும் வந்து செல்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில், புகளூர் நதி நீரேற்று பாசனத்திற்கு சொந்தமான சுமார் 1/2 ஏக்கர் காலி இடம் உள்ளது. அந்த இடத்தில் உபயோகமில்லாத உடைந்து போன சிமிண்ட் குழாய்களை புகளூர் நதி நீரேற்று பாசன நிர்வாகத்தினர் அடுக்கி வைத்துள்ளனர். அதனைச் சுற்றியும் முள் மரங்கள் மற்றும் புதர்கள் காடு போல் வளர்ந்து உள்ளன. உபயோகம் இல்லாத சிமெண்ட் குழாய்களை விஷபாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தங்களது இருப்பிடமாக பயன்படுத்தி குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது.  ஓம் சக்தி நகரின் அருகில் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிறுத்தம் ஆகியவை உள்ளன. இரவு நேரங்கள் மட்டும் இன்றி பகல் நேரத்தில் நடந்து வரும் பொழுது தெருவின் சாலையில் பாம்புகள் ஊர்ந்து செல்வதும், சாலையின் நடுவில் படுத்து இருப்பதையும் பார்த்து அலறியடித்து ஓடி விடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  சமூக விரோதிகளின் கூடாரம்  காடு போல் வளர்ந்துள்ள முட்புதர்கள் உள்ள இந்த இடத்தை சமூக விரோதிகள் தங்களது கூடாரமாக பயன்படுத்தி, பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் இப்பகுதியை தனியாக கடந்து செல்வதற்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.   பாம்புகளால் பொதுமக்க ளுக்கும், குடியிருக்கும் மக்க ளுக்கும், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன்பு முட்புதர்களையும், உபயோகம் இல்லாத சிமெண்ட் குழாய்களை அகற்றவும் கோரி, பலமுறை புகளூர் நதி நீரேற்று பாசன ஊழியர்கள் மற்றும் அலுவலர்களிடம் குடியிருக்கும் பொதுமக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர்.  எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உபயோகம் இல்லாத சிமெண்ட் குழாய்களையும் , முட்புதர்களையும் உடனடியாக அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் மீண்டும் முட்புதர்கள் வளராமல் இருப்பதற்கு தொடர்ந்து பாராமரிப்பு செய்ய நதி நீரேற்று பாசன நிர்வாகத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்என்று ஓம் சக்தி நகர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.