மயிலாடுதுறை, டிச.17 - மயிலாடுதுறை அருகேயுள்ள ஆனந்த தாண்டவபுரத்திலிருந்து சேத்தூர் கிராமம் வரை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக கேட்பாரற்று உள்ளது. ஆனந்ததாண்டவபுரம், பன்னீர்தலைமேடு கீழ மருதாந்தநல்லூர், மேல மருதாந்தநல்லூர், பொன்வாசநல்லூர், சேத்தூர் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான சாலையாக உள்ள இந்த சாலையில், நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். மேலும் பொதுமக்கள் இச்சாலையை கடந்து செல்லும் போது, தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாவதும் தொடர்கிறது. சாலை சரியில்லாததால், தங்கள் பகுதிக்கு ஆம்புலன்ஸ் வருவதேயில்லை என்கின்றனர் வேதனையுடன். பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டு கொள்ளாத நிலையில், சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைத்து, புதிய சாலை அமைத்து தரக்கோரி 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மண்ணிப்பள்ளம் மெயின் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும். மயிலாடுதுறையில் இருந்து சேத்தூர் வரை தினம்தோறும் 8 முறை இயக்கப்பட்ட அரசுப் பேருந்து, 4 முறை மட்டும் இயக்கப்படுவதை கண்டித்தும், அனைத்து பேருந்துகளையும் சேத்தூர் எல்லை வரை முழுமையாக இயக்கக் கோரியும் வலியுறுத்தினர். தகவலறிந்து வந்த மணல்மேடு காவல்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.