அறந்தாங்கி, பிப்.26 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் முத்தையாசுவாமி கோவிலின் மாசிமக திருவிழாவை முன்னிட்டு 8 ஆம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பெரியமாடு, நடுமாடு, கரிச்சான்மாடு என மூன்று பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் போட்டியை கண்டு ரசித்தனர். இந்த பந்தயத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ரூ.3.25 லட்சம் ரொக்கப் பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. ஏம்பல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.