districts

img

மயிலாடுதுறை புத்தகத் திருவிழா ரூ.68.34 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை: ஆட்சியர் தகவல்

மயிலாடுதுறை, பிப்.11-  மயிலாடுதுறையில் ஜனவரி-31 அன்று துவங்கிய புத்தகத்திருவிழா பிப்.10 ஆம் தேதி நிறைவடைந்தது.  மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரியில் 3 ஆவது புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் விழா மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. இதில், ஆட்சியர் உரையாற்றியபோது, மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, பொதுநூலக இயக்ககம் இணைந்து 3 ஆவது புத்தகத் திருவிழாவை நடத்தின. அந்த வகையில் இந்த புத்தகத் திருவிழாவை பிற்படுத்தப்பட்டேர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் 31.1.2025 அன்று தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து 10 நாட்களாக நடைபெற்ற இப்புத்தகத் திருவிழாவில் சிறப்பு வாய்ந்த சொற்பொழிவாளர்களின் சொற்பொழிவுகள் நடந்தன. கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தகத்திருவிழாவில் ரூ.37 லட்சத்து 71 ஆயிரத்து 500 மதிப்பிலான 18,972 புத்தகங்கள் விற்பனையானது. இந்தாண்டு ரூ.68 லட்சத்து 34 ஆயிரத்து 923 மதிப்பிலான 64,726 புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. மேலும் 70 ஆயிரம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். இப்புத்தகத் திருவிழாவில் அரங்குகள் 66, அரசு திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள் 8 என மொத்தம் 74 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.  மேலும், வர்த்தக சங்கம் சார்பில் 1200 மாணவர்களுக்கும், 800 மாணவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 200 மாணவர்களுக்கும் என மொத்தம் 2200 அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசு இளைஞர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கற்றல் திறனை அதிகப்படுத்த இப்புத்தகத் திருவிழா நடத்தி வருகிறது. இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காகவே மாவட்ட நிர்வாகமும் இதனை ஈடுபாட்டுடன் நடத்தியது. இவை அனைத்தையும் மக்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே செய்ய முடிந்தது” என்றார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் அர்ச்சனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சட்டம்) அன்பழகன், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.