இராமேஸ்வரம், அக்.7- கேரளா மாநிலத்தில் சீசன் மீன்பிடி தொழில் தொடங்கி உள்ள நிலையில் நாகை மாவட்டத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் பாம்பன் வடக்கு துறைமுகத்திற்கு வந்தது. இதனைத்தொடர்ந்து, பாம்பன் ரயில் பாலம் திறந்து கடந்த செல்ல மீனவர்கள் துறைமுக அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனர். இந்நிலையில், வெள்ளியன்று பாம்பன் ரயில் தூக்கு பாலம் திறக்கப்பட்ட, 30-க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்து சென்றது. இதே போன்று இராமேஸ்வரத்தில் உள்ள பெரிய விசைப்படகுகளும் பாம்பன் குந்துகால் துறைமுகத்திற்கு கடந்து சென்றது. ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட படகுகள் கடந்து சென்றதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.