districts

img

நூறுநாள் வேலையை முறைப்படுத்தக் கோரி முற்றுகை

திருத்துறைப்பூண்டி, ஆக.10 - நூறு நாள் வேலை கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் கிராம ஊராட்சி வார்டுகளுக்கு சுழற்சி முறையில் நடைபெறும் நூறு நாள் வேலை திட்டத்தை முறைப்படுத்த வேண்டும். வேலை செய்தவர்களுக்கு கூலி வழங்க மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்தும், உடனே கூலி வழங்க கோரியும் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.முத்துகுமாரசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.முருகானந்தம் கே.தமிழ்மணி, மாவட்டக் குழு உறுப்பினர் வி.டி.கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் தெற்கு ஒன்றியச் செயலாளர் காரல் மார்க்ஸ், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜோதிபாசு, வடக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் மாதவவேலன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் முருகதாஸ், விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வநாயகி, மேலாளர் பிரகாஷ் ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.