கரூர், டிச.12- மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழா, கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் பாரதிய மொழிகள் தினமாக கொண்டாடப்பட்டது. இதில் ‘எனது தாய்மொழியில் என் கையொப்பம்’ என்று தாய்மொழிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் வகையில், அனைவரும் அவரவர் தாய்மொழியில் கையெழுத்திடும் நிகழ்வை தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தொடங்கி வைத்தார். 15 மொழிகளில்... பாரதியார் சிறப்பு விழாவின் முக்கிய நிகழ்வாக தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம், உருது, மராத்தி, துளு, ஒடியா, ராஜஸ்தானி, லாவோ, துருக்கி, ஜப்பானிய மொழி உள்ளிட்ட 15 மொழிகளில், மகாகவி பாரதியாரின் உயர் சிறப்புகளை பரணி மாணவர்கள் எடுத்துரைத்தனர். நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பாரதியார் வேடமணிந்து, கையில் தேசியக் கொடிகளை ஏந்தி இந்திய வரைபடம் போன்று நின்றனர். மேலும் மாணவ, மாணவிகளுக்கு பாரதியார் பாடல் ஒப்புவித்தல், கவிதை, பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரணி பார்க் கல்வி குழும தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்து, வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.