தஞ்சாவூர், செப்.5- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள, புதுப்பட்டினத்தில் பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டம், ஓம்கார் பவுண்டேஷன் தன்னார்வ அமைப்பு இணைந்து, ‘‘கடல் பசுக்களை பாதுகாப்போம்’’ என்ற தலைப்பிலான விழிப்புணர்வு முகாமை பள்ளி மாண வர்களுக்கு நடத்தினர். இந்திய அஞ்சல் துறை சார்பில், தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில், மாவட்ட அளவிலான அஞ்சல் தலை கண்காட்சி வரும் அக்டோபர் மாதம் 8, 9 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. அதனொரு பகுதியாக புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, அபு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, ஓம்கார் பவுண்டேஷன் தன்னார்வ அமைப்பு சார்பில், மாணவர்களுக்கு கடல் பசுக்களின் வாழ்விடம், இனப்பெருக்கம் அதன் தனித் தன்மைகள் குறித்து குறும்படம் மூலம் திரையில் ஒளிபரப்பப்பட்டு, கடல் பசுக்களை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடல்வாழ் உயிரினங்கள் குறித்த கண்காட்சியை மாணவர்கள் கண்டு ரசித்தனர். மேலும் கடல்பசு சின்னம் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. இதில் ஓம்கார் பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் பாலாஜி, பள்ளி ஆசிரியர்கள், அஞ்சல் துறையினர், மாண வர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரகுராமகிருஷ்ணன் செய்திருந்தார்.