வாய்ப்பு முகாம் திருச்சிராப்பள்ளி, ஆக.5-
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன.
இம்முகாம், ஆக.12 (சனிக்கிழமை) அன்று பிஷப் ஹீபர் கல்லூரியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெறவுள்ளது. முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத் துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார்த் துறை நிறுவனங்கள் தகுதி யுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளன.
இம்மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்களும், இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 10, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, செவிலியர் மற்றும் பட்டதாரி கள் பங்கேற்கலாம். 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக் குறிப்பு, அனைத்து கல்விச் சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய வற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும், தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் வேலை நாடுநர்கள், தமிழ்நாடு அரசின் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.