திருவள்ளூர், பிப்.29- தாங்கல் பெரும்புலம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி குழந்தைகள் ஆத்திச்சூடி மற்றும் வரைபட கலை சாதனைகள் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த தாங்கல் பெரும்புலம் கிராமத்தில் சுமார் 60 கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கூலி தொழில் செய்யும் இந்த கிராம மக்கள் கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சுமார் 8 கிமீ தூரம் நடந்து சென்று வாங்கிவர வேண்டியநிலை உள்ளது. மேலும் வெளியூர் செல்ல பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் செல்லவும் இவ்வளவு தூரம் நடந்து சென்று பிறகு தான் பேருந்துகளில் பயணிக்க முடியும். இந்த நிலையில் இங்கு ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி ஒன்றும் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு வர ஆசிரியர்கள் 8கிமீ தூரத்திற்கும் ஆட்டோவில் வந்து தான், பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. இவ்வளவு கடினமான சூழலில் இயங்கி வரும் இந்தப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 15 மாணவ,மாணவிகள் திறனை வெளிப் படுத்தும் நிகழ்ச்சி வியாழனன்று (பிப்.22), பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆத்திச்சூடியின் 109 பாடலின் பொருள் விளக்கத்துடன் இரண்டு நிமிடங்களுக்குள் கூறி முடிகின்றனர். அதேபோன்று, தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் 38 மாவட்டத்தையும் வரைபடத்தில் 2 நிமிடங் களில் எழுதிடவும், மாவட்டம் பெயர் கூறினால் சுட்டி காட்டவும், எங்கு உள்ளது என கேட்கும்போது மாவட்டம் பெயரை கூறவும் செய்கின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் கல்பனா மற்றும் உதவி ஆசிரியர் பவானி ஆகியோர் அளித்த பயிற்சி காரணமாக பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர் இராம்ராஜ், இடைநிலை ஆசிரியர்கள் காளாஞ்சி மகேந்திரன், மகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் திறன்களை நேரில் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். பின்னர் 15 மாணவர் களுக்கும் திருக்குறள் மற்றும் உலக வரைபட புத்தகங்கள் வழங்கினர். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டனர்.