தமிழ்நாட்டையும் விவசாயிகளையும் வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து குறிஞ்சிப்பாடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் புதன்கிழமை (ஜூலை 31) நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் ஆடுர் அகரம், பெரிய கண்ணாடி, மேட்டுவெளி, பொன்வெளி, மஞ்சப் பேட்டை, மேல புதுப்பேட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேரடியாக வயல்வெளியில் விவசாயிகளுடன் உரையாடி, ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து பேசி நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் ஆர்.கே.சரவணன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய துணை செயலாளர் எஸ்.குமரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேலூர் மாவட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி இயக்கம் சார்பில் வேலூர் மாவட்டத்தில் அலமேலு மங்காபுரம், அரியூர், சித்தேரி, காட்பாடியில் ஜாப்ராபேட்டை, வஞ்சூர், சேனூர், குடியாத்தம் வட்டத்தில் அக்ராவரம், சேங்குன்றம், தட்டப்பாறை, மூங்கப்பட்டு, பேர்ணாம்பட்டு வெ.கோட்டா சாலை, செட்டி குப்பம், காக்கா தோப்பு ஆகிய 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.சாமிநாதன், பொருளாளர் ஜி.நரசிம்மன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.குணசேகரன் செயலாளர் செ.ஏகலைவன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.