districts

வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடச் சென்ற இருவர் பலி

மதுரை, ஆக.24-

      மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா இடையப்பட்டி வனப்பகுதியில் வேட்டையாட சென்ற 12-ஆம் வகுப்பு  மாணவர் உட்பட இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த னர். காட்டுப்பன்றிகளை வேட்டையாட அழைத்துச் செல்லப்பட்ட நாயும் சம்பவத்தில் பலியானது.

      இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: இடையப்பட்டி மற்றும் ஆலப்பழச்சேரியைச் சேர்ந்த சிலர் புதன்கிழமை நள்ளிரவு வனப்பகுதியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடச் சென்றுள்ளனர். அவர்களில் மூன்று பேர் விலங்குகளை வேட்டையாடு வதற்காக மற்றொரு குழு வைத்திருந்த மின்பொறியை தவறுதலாகத் தொட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் பலியாயினர். இந்தச் சம்பவம் புதன்கிழமை நள்ளிரவு 12.15 மணிக்கு நடந்துள்ளது.

      இறந்தவர்கள் பாப்பநாயக்கன்பட்டி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அனுமந்த ராஜ் மற்றும் கருப்பசாமி என்பது தெரியவந்துள்ளது. இவர்களில் எம்.மனோஜ் என்பவர் மின் தாக்குதலில் அதிர்ச்சியடைந்தார். இவர் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து நாகையாபுரம் காவல்துறையினர் விசா ரிக்கின்றனர்.