districts

img

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று ஊர் திரும்பிய மாணவிக்கு உற்சாக வரவேற்பு

தஞ்சாவூர், பிப்.5–  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த வாட்டாகுடி வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் - தனலெட்சுமி தம்பதியரின் மகள் சாராஸ்ரீ (19). சிறு வயதிலிருந்தே விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு உயரம் தாண்டுதலில் முதலிடம் பெற்று நாட்டிற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்தார். இதன் காரணமாக விளையாட்டு இட ஒதுக்கீடு மூலம், திருச்சி தேசியக் கல்லூரியில், பி.எஸ்சி உடற்கல்வி படிப்பு கிடைத்தது. தற்போது மாணவி சாராஸ்ரீ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும், என்.எஸ்.எஸ் பிரிவிலும் உள்ளார். இந்நிலையில், கடந்த ஜன.26 ஆம் தேதி தில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில், தமிழகத்தில் இருந்து 12 பேர் பங்கேற்றனர். இதில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட ஒட்டுமொத்த டெல்டா மாவட்டத்திற்கே, ஒரே ஒரு மாணவியாக, சாராஸ்ரீ தகுதி பெற்று கலந்து கொண்டார். குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட மாணவி சாராஸ்ரீ புதன்கிழமை காலை தில்லியில் இருந்து ஊருக்கு வந்தார். பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் அவரை கிராம மக்கள், தன்னார்வலர்கள் வரவேற்றனர். மேலும், கிராமப்புறத்தில் இருந்து தலைநகர் வரை சென்று வந்த சாராஸ்ரீயை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.