திருச்சிராப்பள்ளி, ஜூலை 13 - அனைவருக்கும் நூறு நாள் வேலை வழங்க வலியுறுத்தி, திருச்சி புறநகர் மாவட்டம் துறையூர் வட்டம் எரக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஜூலை 4 அன்று எரக்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் துறையூர் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஜூலை 11 அன்று முதல் சுழற்சி முறையில் ஆயிரம் பணியாளர்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் வேலை வழங்கப்படவில்லை. இதனை கண்டித்தும் அனைவருக்கும் வேலை வழங்க கோரியும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் தலைமையில், நூறு நாள் வேலைத் தொழிலாளர்கள் எரக்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை வழக்கறிஞர் முத்துக்குமார் துவக்கி வைத்தார். மூத்த தோழர் பாலசுப்ரமணியன், எரக்குடி கிளைச் செயலாளர் சங்கர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தையொட்டி உப்புலியபுரம் பிடிஓ, துறையூர் வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் மற்றும் ஏடி பஞ்சாயத்து தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், “இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தபின், ஜூலை 17 அன்று எரக்குடி பஞ்சாயத்தில் ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும்” என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து காத்திருக்கும் பேராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.