வன்கொடுமைத் தடுப்புச்சட்ட வழக்குகளில் மிகவும் கொடூரமானதும் துணிகரமானதுமான வன்கொடுமை, மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் உட்பட ஆறு பட்டியலினத்தவர்கள் (தலித்துகள்) படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும். 1997 ஜூன் 30 அன்று இந்தச் சம்பவம் நடந்தது. இன்று அந்தத் தியாகிகளின் 26-ஆவது நினைவு தினம்.
மேலவளவு ஊராட்சித் தலைவர் பதவி, 1996-ஆம் ஆண்டு முதல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தனித்தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டது.
அரசியலமைப்புச் சட்டப்படி தங்களுக்குக் கிடைத்த புதிய உரிமையை கைக்கொள்ள பட்டியலின மக்கள் ஆர்வம் காட்டினர். இதையடுத்து மேலவளவைச் சேர்ந்த முருகேசனும் மற்றும் சிலரும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். ஆனால், அவர்கள் மிரட்டப்பட்டனர். இதையடுத்து அவர்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
மேலூர் வட்டாட்சியர் நடத்திய சமாதானக் கூட்டத்தில், பெரும்பான்மை சமூகத்தினர் அரசு ஆணைக்குக் கட்டுப்படுவதாக உறுதியளித்தனர். இருப்பினும் அச்சம் காரணமாக பட்டியலின மக்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை.
எனவே, 1996-ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று நடைபெறுவதாக அறிவித்திருந்த தேர்தல் நடைபெறவில்லை. மீண்டும் அதே ஆண்டு டிசம்பர் 28 அன்று நடைபெற்ற தேர்தலில் முருகேசன் உட்பட சிலர் போட்டியிட்டனர். தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சாதி ஆதிக்க சக்திகள் வாக்குச்சாவடிக்குள் புகுந்து, மக்களைத் தாக்கிவிட்டு வாக்குப்பெட்டிகளை தூக்கிச் சென்று தேர்தலைத் தடுத்துவிட்டனர். காவல் துறையின் பலத்த காவலுடன் மீண்டும் 31.12.1996 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. பெரும்பான்மை சாதியினர் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க, பட்டியலின மக்கள் மட்டுமே வாக்களித்தனர். இந்தத் தேர்தலில் முருகேசன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எனினும் ஊராட்சி மன்றத் தலைவர் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிய முடியாத அளவிற்கு முருகேசன் தடுக்கப்பட்டார். இதனிடையே முதலில் அறிவிக்கப்பட்ட தேர்தலின் போது முருகேசன் உள்ளிட்டவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ததால் ஆத்திரமடைந்த சாதி ஆதிக்க சக்திகள் பட்டியலின மக்களின் மூன்று குடிசைகளுக்குத் தீ வைத்தனர். தீ வைக்கப்பட்ட குடிசைகளின் உரிமையாளர்களுக்காக இழப்பீடு பெற்றுத் தர ஊராட்சித் தலைவர் பொறுப்பிலிருந்த முருகேசன் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்.
எரிக்கப்பட்ட குடிசைகளுக்கு நிவாரணம் கேட்டு 1997 ஜூன் 30 அன்று மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க, முருகேசன் பாதிக்கப்பட்டவர்களை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அன்றைய தினம் ஆட்சியர் இல்லாததால் அவரது உதவியாளரைப் பார்த்தனர். அங்கு வந்திருந்த சாதி ஆதிக்க வெறியர்கள் இவர்கள் எந்தப் பேருந்தில் ஊர் திரும்புவார்கள் என நோட்டமிட்டு அவர்களும் அந்தப் பேருந்தில் பயணம் செய்தனர்.
பேருந்து மேலூர் பழைய கள்ளுக்கடைமேடு என்ற இடத்தின் அருகே வந்ததும், பேருந்தில் வந்த ஒருவர் ஓட்டுநரை வண்டியை நிறுத்தும்படி கூச்சல் போட்டார். அதே சமயம், சென்னகரம்பட்டியைச் சேர்ந்த ஒரு கும்பல் ஆயுதங்களுடன் முருகேசன் உள்ளிட்டவர்களைச் சூழ்ந்து கொண்டது.
பேருந்தில் வந்த முருகேசன், ராஜா, செல்லதுரை, சேவகமூர்த்தி, மூக்கன் (ஊராட்சி மன்ற துணைத் தலைவர்) பூபதி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
ஓடோடிச் சென்று ஆறுதல் கூறிய என்.சங்கரய்யா
இந்தச் சம்பவம் குறித்து கேட்டறிந்து முதலில் மேலவளவிற்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் என்.சங்கரய்யா தான். மேலவளவு சம்பவத்தைத் தொடர்ந்து தீண்டாமைக்கொடுமைகள் கூடாது தீண்டாமையை ஒழிக்க வேண்டும் அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தோழர் என்.சங்கரய்யா வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து 1997 செப்டம்பர் 1 அன்று மதுரையில் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை தமிழக அரசு நடத்தியது. அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், சங்கரய்யா பேசினார். அப்பொழுது, தீண்டாமைக் கொடுமைக்கு முற்றுப் புள்ளிவைக்க வேண்டுமானால், கிராமப்புற சமூக-பொருளாதார நிலையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.
அதற்கு தீவிர நிலச்சீர்திருத்தத்தை அமலாக்க வேண்டும். இந்தியாவின் குடியரசுத் தலைவராக கே.ஆர்.நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரைக் குடியரசுத் தலைவராக அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆனால் மேலூருக்கு அருகில் மேலவளவு ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட ஊராட்சியில், போட்டியிட்டு வெற்றிபெற்று பொறுப்பேற்ற முருகேசனும் அவருடன் ஐந்து பேரும் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவரை ஊராட்சித் தலைவராக ஏற்க மறுத்த சாதி ஆதிக்க சக்திகள் அவரைப் படுகொலை செய்துள்ளனர்.
நான் அந்த கிராமத்திற்குச் சென்றிருந்தேன். முருகேசனின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அந்த கிராம மக்கள் பீதியுடன் வாழ்கின்றனர். என்ன கொடுமை இது? சுதந்திர பொன்விழாவைக் கொண்டாடும் இந்தத் தருணத்திலும் தமிழ்நாட்டின் பல கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை தொடரவே செய்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் காலில் செருப்பு போட்டு நடக்க முடியவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி கிளாசில் டீ தரப்படுகிறது. இந்தக் கொடுமைக்கு எதிராக வலுவான மக்கள் இயக்கத்தை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
1997-ஆம் ஆண்டு நடைபெற்ற மேலவளவு சம்பவத்தை நினைவு கூறும் இந்தத் தருணத்தில் மதுரை மாவட்டத்தில் தற்போதும் நிலவும் தீண்டாமைப் பிரச்சனைகள் தொடர்கின்றன. சாதி ஆதிக்க சக்திகளால் பட்டியலின மக்கள் தாக்கப்படுவதும் தொடர்கிறது. இக் கொடுமைக்கு எதிராக தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
மேலவளவு தியாகிகள் தினம்
மேலவளவு தியாகிகளின் 26 ஆவது ஆண்டு நினைவுதினத்தில் அவர்களது நினைவிடத்தில் ஜூன் 30-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பத்து மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அஞ்சலி நிகழ்வு நடைபெறுகிறது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, மேலூர் தாலுகா செயலாளர் எம்.கண்ணன் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்துகின்றனர்.