districts

img

ஏற்றுக் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஆக.21 -

     டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளர்களுக்கு ஏற்றுக் கூலியை உயர்த்தி வழங்கிட கோரி, டாஸ்மாக் குடோன் முன்பு சிஐடியு டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் நாகை மாவட்ட டாஸ்மாக் குடோன் செயல்பட்டு வருகிறது. அந்த குடோனில் ஏராளமான சுமைப் பணி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

     இந்நிலையில் டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளர்களுக்கு விஜயலட்சுமி டிரான்ஸ்போர்ட்லிருந்து  ஏற்றுக் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். தாய், ஆர்.ஆர். டிரான்ஸ்போர்ட் நிலுவையில் வைத்திருக்கும் கூலியை பெற்றுத் தர வேண்டும். குடிநீர், கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். குடோனில் மேற்கு, தெற்கு, வடக்கு பகுதிகளில் மேற்கூரை அமைத்திட வேண்டும்.  

    இபிஎப், இஎஸ்ஐ-ல் நிர்வாகத்தின் பங்குத் தொகையை தொழிலாளியின் கூலியில் பிடிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப் பணி தொழிலாளர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.சேகர், கைத்தறி பட்டு நெசவாளர் சங்க தலைவர் ஜி.பக்கிரிசாமி ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.  

    சுமைப்பணி தொழிலாளர் சங்க துணைத் தலைவர் பிரபு, செயலாளர் செல்வம் உட்பட ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்று, நிர்வாகத்திடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.