புதுக்கோட்டை, நவ.19 - புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புனல்குளத்தில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள இடத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகத் (தாட்கோ) தலைவர் உ.மதிவாணன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரையின் தொடர் முயற்சியால் கந்தர்வகோட்டையை அடுத்த புனல்குளத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) சார்பில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் திருமணம் மண்டபம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புனல்குளத்தில் திருமண மண்டபம் கட்டப்பட உள்ள இடத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகத் (தாட்கோ) தலைவர் உ.மதிவாணன், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கந்தர்வகோட்டை வட்டாட்சியர் விஜயலெட்சமி, ஊராட்சி மன்றத் தலைவர் ரேணுகாதேவி உதயகுமார், துணைத் தலைவர் சக்திவேல், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.