தஞ்சாவூர், ஆக.3 -
பேராவூரணி அருகே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் விசைப்படகில் இருந்த பலகை தலையில் வேகமாக இடித்ததில் மரணம் அடைந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, மல்லிப்பட்டினம் ராமர் கோவில் தெருவைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மகன் முருகன் (46) மீனவர், இவர் அதே பகுதியைச் சேர்ந்த மருதை என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார்.
மல்லிப்பட்டினம் துறைமுகப் பகுதியில் இருந்து, சுமார் ஆறு நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் புதன்கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, படகில் இருந்த கனமான மரப்பலகை முருகன் தலையில் பலமாக மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த முருகனை உடனிருந்த மற்ற மீனவர்கள் மீட்டு கரைக்குக் கொண்டு வந்து, அங்கிருந்து தனி யார் ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில், கடலோர காவல் படை ஆய்வாளர் மஞ்சுளா, உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன முருகனுக்கு மனைவி மகமாயி (42), மற்றும் 18, 12 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.