districts

படு பள்ளத்தில் ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம்

மன்னார்குடி, பிப்.14- திருவாவூர் மாவட்டம் மன்னார்குடி வருவாய் வட்டம் ஓகை பேரையூர் கிராமத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. மன்னார்குடி - ஒரத்தநாடு சாலையில் சுமார் 7 கிமீ. தொலைவில் உள்ள இந்த கொள்முதல் நிலையம் சாலையில் இருந்து விலகி படு பள்ளத்தில் உள்ளது.  10 நிமிடம் கனமழை பெய்தாலே தண்ணீர் பாய்ந்து கடும் சேதத்தை விளைவிக்கும் அபாய நிலையில் உள்ளது. இதுபற்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் தெரிவித்ததாவது: இந்த இடத்தை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எப்படி தேர்வு செய்தார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. மழை பெய்தால்கூட பள்ளத்தில் இருக்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்குள் மழை நீர்  பாய்ந்துவிடும். நெல் மூட்டைகள் நாசமாகும். ஒரு மூட்டைகூட மிஞ்சாது. பரவலாக அடுக்கி வைக்கப்பட்டது ஒருபுறம் இருந்தாலும், போடப்பட்ட  நெல் அட்டிகள் பெரும்பாலானவை பேலட்டுகள், அதாவது கருங்கல் மீது  தடிக்கம்பங்கள் போட்டு உருவாக்கப்பட்டவை மீது அடுக்கி வைக்கப்படவில்லை. அப்படியே பேலட்டுகள் போடப்பட்டாலும், இடம் பள்ளமாக இருப்பதால் மழை நீர் அதையும் தாண்டி நெல் மூட்டைகளை விட்டு வைக்காது.  இந்த அதிர்ச்சி ஒருபுறம் இருக்க, கரையான் ஒரு சில நாட்களிலேயே மூட்டைகளை நாசப்படுத்திவிடும் நிலையும் உள்ளது. விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்து, சுந்தரக்கோட்டை கிடங்கிற்கோ அல்லது பாமணியில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கோ அவ்வப்போது அனுப்பி கொள்முதல் நிலையத்தை தூய்மை செய்ய வேண்டும்.  ஆனால் அப்படி நெல் போக்குவரத்து நடைபெறவில்லை. லாரிகள்  கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், லாரி மார்க்கெட்டுகளில்  லாரிகள் தாராளமாகக் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. பிறகு ஏன் இந்த அவல நிலை? கொள்முதல் நிலைய பணியாளர்களும் கைகளை பிசைந்து கொண்டு நிற்கின்றனர். ஏற்கனவே, கவலையில் உள்ள விவசாயிகளும் இழப்பை எதிர்நோக்கி மன உளைச்சலில் உள்ளனர்.  நெல் நாசமாகும் அபாயத்தைத் தவிர்த்துக் கொள்ள, விவசாயிகளின் கவலையைப் போக்க, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திருவாரூர் மண்டல நிர்வாகம் உடனே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், விவசாயிகளைத் திரட்டி, சாலை மறியல் உட்பட போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைத் தவிர வேறுவழியில்லை. இவ்வாறு ஐ.வி.நாகராஜன் தெரிவித்தார்.  மாவட்டக்குழு உறுப்பினர் ஆறுபிரகாஷ், ஒன்றியச் செயலாளர் கே. ஜெயபால் அப்போது உடனிருந்தனர்.