மதுரை, மார்ச் 13- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை நீதிமன்றம் நிர்ணயித்த காலத்திற்குள் முடிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார். 36 மாதங்களில் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறைவடையும் எனக் கூறப்பட்டது. ஆனால் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை. எனவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை நீதிமன்றம் வகுக்கும் காலத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும். கட்டுமான பணியில் உண்மையை மறைத்து பொய் அறிக்கையை வெளியிடும் அரசு அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு சிறப்பு தீர்மானம் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு செவ்வாயன்று நடைபெற்றது. இதில் ஒன்றிய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீடு பணிகள் நிறைவடைந்து விட்டது. 2026 இல் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். மேலும் முழு விவரங்களை அடுத்த வாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் மனுதாரர் சம்பந்தமில்லாத அதிகாரிகளை வாதிகளாக சேர்த்துள்ளதாகவும் வாதிட்டார். இதனையடுத்து நீதிபதிகள், எதற்காக பிரதமர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரின் முதன்மை செயலாளர்களை எதிர்மனுதாரராக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் குறித்து ஒன்றிய நிதித்துறை செயலாளர், ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர், இந்திய மருத்துவ கழக இயக்குனர், மாநில சுகாதாரச்செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.