districts

img

பிப்.15, 16 தேதிகளில் 32-ஆவது குழந்தைகள் அறிவியல் மாநாடு

புதுக்கோட்டை, பிப்.11-  32-ஆவது குழந்தைகள் அறிவியல் மாநாடு வருகின்ற பிப்.15, 16 தேதிகளில் புதுக்கோட்டை அருகே புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவர் ஆர்.ராஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 10 முதல் 17 வயது வரையான குழந்தைகளிடம் ஏதேனும் ஒரு கருப்பொருளில் ஆய்வு அறிக்கை மாவட்ட அளவில் பெறப்பட்டு தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட ஆற்வறிக்கைகள் மாவட்ட, மண்டல அளவிலும், மண்டல அளவில் தேர்வு செய்யப்பட்ட ஆய்வறிக்கைக்கைள் மாநில அளவிலும் தேர்வு செய்யப்படும். மாநில மாநாட்டில் 30 சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு அகில மாநாட்டில் சமர்ப்பிக்கப்டும். அதன்படி, மண்டல அளவில் தேர்வு செய்யப்பட்ட ஆய்வறிக்கைகளுடன் 32-ஆவது குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு பிப்ரவரி 15, 16 தேதிகளில் புதுக்கோட்டை அருகே புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. மாநாட்டின் நோக்கம் குழந்தைகளின் அறிவியல் திறமைகளை வெளிக்கொணர்தல், புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளித்தல், சமூக பிரச்சனைகளுக்கு அறிவியல் மூலம் தீர்வு காணுதல், அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அறிவியல் மனப்பான்மையை உருவாக்குதல் இதன் முக்கியமான நோக்கமாகும். கடந்த காலங்களில் இம்மாநாடுகளில் தேர்வுசெய்யப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் அரசுக்கு பயனுள்ள வகையிலும், மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாநாட்டின் கருப்பொருள் 32-ஆவது குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் கருப்பொருள் “பாதுகாப்பான நீர் மேலாண்மை’’ ஆகும். உபதலைப்புகளாக நீர் அனைவருக்குமானது, நீர் பாதுகாப்பு பாரம்பரிய நவீன தொழில்நுட்ப யுத்திகள், நீர் சூழலும் பாதுகாப்பு, நீர் சார்ந்த பொதுச் சுகாதாரம், நீர் சார்ந்த நோய்கள் ஆகிய 5 தலைப்புகள் ஆகும். மேற்கண்ட தலைப்புகளில் தமிழ்நாடு முழுவதும் 15,000 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில், 125 சிறந்த ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு மாநில மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. துவக்கவிழா பிப்.15 அன்று மாநிலத் தலைவர் பேரா. திருநாவுக்கரசு தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி தலைவர் கே.ரெத்தினம், நிர்வாக இயக்குநர் ரெ.துரை, செயலாளர் மோ.ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநாட்டில், கணித அறிவியல் மைய விஞ்ஞானி ஆர். இராமானுஜம், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் வி.ஜி. கோபிநாத், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி முனைவர் ஆர். ராஜ்குமார், பூச்சியியியல் விஞ்ஞானி முனைவர் எஸ்.தினகரன், மாநிலப் பொதுச்செயலாளர் எம்.எஸ். முஹமதுபாதுஷா, மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விஞ்ஞானிகள் சந்திப்பு என்ற அமர்வில் இஸ்ரோ விஞ்ஞானி ஐ. இங்கர்சால், பேரா எஸ்.மோகனா ஆகியோர் குழந்தைகளுடன் உரையாடுகின்றனர். நிறைவு விழா நிறைவு விழாவில், மாநில அளவில் தேர்வு செய்யப்படும் 60 குழந்தை விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கி சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்புரையாற்றுகிறார்.