தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளில் ரூ.1,700 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் பொன்.குமார் தகவல்
தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு, கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,700 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன். குமார் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழகத்தில் தொழிலாளர் நல வாரியத்தில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 13 லட்சம் பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 17 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1,700 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வாரியத்தில் தொழிலாளர்களின் வைப்பு நிதி ரூ.6 ஆயிரம் கோடி உள்ளது. வருகிற நிதிநிலை அறிக்கையில் தொழிலாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளோம். இதற்கு தமிழக முதல்வர் அனுமதி வழங்குவார் என்றார்.
மேலும், தமிழக முதல்வர் பிறந்த நாளையொட்டி, நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் 2 ஆயிரத்து 516 பேருக்கு ரூ. 77 லட்சம் மதிப்பில் கல்வி, திருமண உதவி, ஓய்வூதியம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.