districts

img

பெண்கள் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்க!

திண்டுக்கல், மார்ச் 10- பெண்களின் பதவி உயர்வைப் பறிக்கும் அரசாணை எண் 243-ஐ உடனடியாக ரத்து செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும், பழைய பென்சன் திட்டம் தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பெண் ஆசிரியர்கள் கருத்தரங்கம்  வலியுறுத்தியது.

கருத்தரங்கிற்கு மாநிலத் தலைவர் மு.மணிமேகலை தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சி.ஜி.பிரசன்னா வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் ச.மயில் துவக்கவுரையாற்றினார்.  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச்செயலாளர் எம்.கிரிஜா கலந்து கொண்டு ‘‘விந்தை மனிதர் தலை கவிழ்வோம்’’ என்ற தலைப்பில் பேசினார். சோக்கா அறக்கட்டளையின் இயக்குநர் செல்வகோமதி, சங்கத்தின் மாநிலப் பொருளாளர் மத்தேயு, துணை பொதுச்செயலாளர் தா.கணேசன், எஸ்.டி.எப் பொதுக்குழு உறுப்பினர் தோ.ஜான் கிறிஸ்துராஜ், மாநிலச் செயலாளர் த.சகிலா ஆகியோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  

பின்னர் மாநிலத் தலைவர் மு.மணிமேகலை செய்தியாளர்களிடம் கூறுகையில், பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை நிகழ்த்துவோர் மீது உடனடியாக தண்டனை கிடைக்கவேண்டும். எந்த வகையில் அவர்கள் தப்பித்துவிடக்கூடாது. அதற்கு அரசு சட்ட ரீதியான துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசும் காவல்துறையும் பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

 பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்கிற வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளிலும் மன நல ஆலோசகர்களை நியமித்து பெண் குழந்தைகளுக்கு கவுன்சிலிங், மன நல ஆலோசனை வழங்க வேண்டும். பள்ளிகளில் ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையிலான புதிய பாடத்திட்டத்தை கொண்டு வர அரசு முயற்சிக்க வேண்டும்.

 அதேபோல் பாலியல் நலக் கல்வியை பள்ளிகளில் அறிமுகப்படுத்தினால் எதிர்கால சமுதாயமாவது இது போன்ற பெண்கள், பெண் குழந்தைகள் மீதூன வன்முறைகள் நடைபெறாமல் இருப்பது மட்டுமல்ல, பெண் சமத்துவ பார்வையோடு குழந்தைகள் வளர்வார்கள்.  ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் புகார் குறித்து விசாரிக்கும் விசாகா கமிட்டி உருவாக்கப்பட வேண்டும்.  10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் புகார் கமிட்டிகள் அமைக்க வேண்டும். அப்படி அமைக்கும் புகார் கமிட்டிகள் செயல்பாட்டில் இருக்கிறதா என்று அரசு கண்காணிக்க வேண்டும்.

 பெண் ஆசிரியர்கள் பாடம் சொல்லித் தரும் கல்வி நிறுவனங்களில் மன உளைச்சல் இல்லாமல் சுதந்திரமாக பணி செய்யும் சூழல் உருவாக்க வேண்டும். கற்பித்தல் தவிர பிற பணிகள், இணைய தள வசதிகள் இல்லாமலே புள்ளிவிவர பட்டியல்கள் தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்திப்பதை தவிர்க்க வேண்டும்.

 பெண்களின் பதவி உயர்வை பறிக்கக்கூடிய அரசாணை எண் 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த அரசாணையால் பெண்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுவது  மட்டுமல்ல, மாணவ, மாணவியர்களின் கல்வி நலனும் பாதிக்கப்படும். டிட்டோ ஜாக் சார்பில் அரசு ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகளையும் உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும்’’ என்று தெரிவித்தார்.  பேட்டியின் போது மாநிலச் செயலாளர்கள் பிரசன்னா, சகிலா ஆகியோர் உடனிருந்தனர்.