districts

img

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 ஆயிரம் இழந்த பட்டதாரி இளைஞர் தற்கொலை

ஒட்டன்சத்திரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ 50 ஆயிரம் பணத்தை இழந்ததால் பட்டதாரி வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கூத்தம்பூண்டி கிராமம் கருமாங்கிணற்றைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் அருண்குமார்(வயது 24) பி.காம். வரை படித்துள்ளார். இவரது தந்தை சங்கர் ஏற்கனவே இறந்துவிட்டார். தாயார் விஜயலட்சுமி மற்றும் பாட்டி அத்தம்மாள் ஆகியோரது பாதுகாப்பில்   வளர்ந்து வந்துள்ளார். தாயார் வாங்கிக்கொடுத்த செல்போன் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட அருண்குமார் ரூ. 50 ஆயிரம் வரை பணத்தை இழந்துள்ளார்.  இதனால் தாய் மற்றும் பாட்டி, உறவினர்கள் அருண்குமாரை ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாடாதே என திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த  அருண்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார்.  உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 

இது குறித்து கள்ளிமந்தையம் போலீசில் தாயார் விஜயலட்சுமி புகார் செய்தார்.இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கருமாங்கிணறு ஊர் பொதுகிணற்றில் அருண்குமாரின் உடல் நேற்று முன்தினம் மாலை மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு வீரர்கள் உடன் விரைந்து வந்து  40 அடி ஆழமுள்ள கிணற்றில் அருண்குமாரின் உடல் மீட்டனர். அருண்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து கள்ளிமந்தையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தமிழக அரசு இயற்றியிருக்கும் ஆன்லைன் தடை மசோதாவுக்கு தற்போது வரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.