districts

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு ஆண்டுக்கு ரூ.3 கோடி மானியம் தமிழக அரசுக்கு அறங்காவலர் நன்றி

தஞ்சாவூர், மே 9 - தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு, ஆண்டுக்கு ரூ.3 கோடி மானியம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜிராஜா பான்ஸ்லே நன்றி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் 88 கோயில்களை கொண்டுள்ள முதுநிலை தேவஸ்தானமாகும். இதில் பாடல் பெற்ற தலங்கள், பிரார்த்தனை தலங்கள், மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள், சக்தி தலங்கள், யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டவை போன்ற பல கோயில்கள் உள்ளன.  இந்த தேவஸ்தானத்திற்குட்பட்ட கோயில்கள் பெரும்பாலும் குறைந்த வருவாய் மட்டுமே வரக் கூடியதாக உள்ளது. முதன்மையாக வருவாய் வரப் பெறும் பெருவுடையார் கோயில் மற்றும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்களின் வருவாயைக் கொண்டே இதர கோயில் நிர்வாகத்தையும் நிதி பற்றாக்குறையுடன் இப்போது மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையை போக்கும் வகையில் அரசு நிதியுதவிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று அறநிலையத் துறையின் 2022-23ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், நிதி பற்றாக்குறையில் இருக்கும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு மானியமாக ஆண்டுதோறும் ரூ.3 கோடி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தேவஸ்தானத்திற்கு இப்போது இருந்து வரும் நிதி பற்றாக்குறையை போக்குவதோடு, வருங்காலத்தில் தேவஸ்தான கோயில்கள் வளமான நிர்வாகத்தை நோக்கி பயணிப்பதற்கு உறுதுணையாய் இருக்கும்.  இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர், அறநிலையத் துறை செயலாளர், ஆணையர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.