districts

மதுரை ஆதீனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கஞ்சனூர் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்  ஜூன் 15 -  “அடுத்த பிறவியில் வௌவ்வால் ஆக பிறக்க வேண்டும்” என கஞ்சனூர் கிராம மக்களுக்கு சாபமிடும் மதுரை ஆதீனத்திற்கு அக்கிராம மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் கஞ்சனூரில் நவக்கிரக தலங்களில் ஒன்றாக கருதப்படும் சுக்கிரன் கோயில் உள்ளது. இந்த கோயில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கோயிலாகும். இந்த கோயிலில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு, இதுவரை எந்த கும்பாபிஷேக பணிகளும் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே தமிழக அரசு கும்பாபிஷேக குழு ஒன்றை அமைத்து கும்பாபிஷேகத்தை நடத்தித் தர வேண்டும். மேலும் இத்தலம் மதுரை ஆதீனம் அருணகிரி ஞானசம்பந்தர் சன்னிதானமாக இருந்து வந்த நிலையில், அவர் மரணமடைந்ததையடுத்து புதிய சன்னிதானமாக ஹரிஹர ஞானசம்பந்தர் பொறுப்பேற்று கொண்டார். இவர் கட்டளை சாமியாக இருந்த போது, கஞ்சனூரில் சரிவர கணக்கை முறையாக பராமரிக்காமல் பணத்தை ஊழல் செய்துவிட்டார் என நீதிமன்றத்தில் குத்தகைதாரர்கள் சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் 40-க்கும் மேற்பட்ட குத்தகைதாரர்கள் மட்டும் இருந்து வரும் நிலையில், 4 கிராம மக்கள் மீது, தற்போது பதவியேற்ற மதுரை ஆதீனம் வீண் பழி சுமத்துகிறார். “இங்குள்ள கிராம மக்கள் அடுத்த பிறவியில் வௌவ்வாலாக பிறக்க வேண்டும்” என சாபம் விடுகிறார். எனவே கஞ்சனூர் கோயிலை ஆய்வு செய்து, கோயில் தமிழக அரசு கட்டுப்பாட்டில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கஞ்சனூர், கோட்டூர், துகிலி, மணலூர், உள்ளிட்ட 4 கிராம மக்கள் கஞ்சனூர் சுக்கிரன் கோயில் முன்பு திரண்டு மதுரை ஆதீனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மக்களை தவறாக சித்தரிக்கும் ஆதீனத்தை எதிர்த்து உண்ணாவிரதம் நடைபெறும் எனவும் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

;