districts

img

மேட்டூர் அணை மூடப்பட்டதால் தஞ்சை பகுதிகளில் காய்ந்து வரும் நெற்பயிர்கள்

மேட்டூர் அணை மூடப்பட்டதால், தஞ்சாவூர் அருகே அறுவடைக்குத் தயாராகி வரும் சம்பா, தாளடி பருவ நெற்பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன.

மேட்டூர் அணை வழக்கம்போல ஜனவரி 28 ஆம் தேதி மூடப்பட்டது. என்றாலும், டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சம்பா, தாளடி சாகுபடி நடைபெற்று வருகின்றன. இவற்றில் பெரும்பாலும் அறுவடைக்குத் தயாராகி வரும் நிலையில் உள்ளன.

இந்நிலையில், தஞ்சாவூர் அருகே மானோஜிபட்டி, வண்ணாரப்பேட்டை, சித்திரக்குடி, ஆலக்குடி உள்பட பல்வேறு பகுதியில் பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தற்போது பயிர்கள் கதிர் விட்டு, 20 நாள்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. மேட்டூர் அணை மூடப்பட்டதால் கல்லணைக் கால்வாயில் தண்ணீர் வருவதும் நின்றுவிட்டது. 

இதனால், இப்பகுதிகளில் சம்பா, தாளடி பருவ நெற் பயிர்கள் காய்ந்து வருகின்றன. இதனால், விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் தெரிவித்ததாவது, 
"ஏற்கெனவே நவம்பர் மாதத்தில் பெய்த தொடர் மழையால் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. அதிலிருந்து மீண்டு வந்து விவசாயிகள் மறு நடவு செய்தனர்.

தற்போது சம்பா, தாளடி பயிர்கள் அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளன. இந்த நேரத்தில் மேட்டூர் அணை மூடப்பட்டதால், தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்து வருகின்றன. இதனால், என்ன செய்வது எனத் தெரியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். 

இதேபோல் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் உள்ளிட்ட கடைமடைப் பகுதியிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 

விவசாயிகளின் நிலையை உணர்ந்து மேட்டூர் அணையை 25 நாள்களுக்குத் திறந்து, கல்லணைக் கால்வாயில் கருகும் பயிர்களை காத்திட தண்ணீர் விட அரசு நடவடிக்கை எடுத்தால், இப்பயிர்களைக் காப்பாற்றி விடலாம்" எனத் தெரிவித்தனர்.