தஞ்சாவூர், ஜன.1- தஞ்சாவூர் மாவட்டத்தில் ‘வீட்டுக்கு ஒரு விருட்சம்’ திட்டத்தின் கீழ், 8 மாதங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட பசுமைக் குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில், வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தின் கீழ், ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தை, உலக புவி தினமான, கடந்த ஏப்.22 ஆம் தேதி தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதல் மரக்கன்றை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாணவிகளுடன் சேர்ந்து நட்டு துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும், வீடுகள், கல்லூரிகள், பள்ளிகள், கோயில் வளாகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலை வளாகங்கள், ஆற்றுப்படுகைகள் மற்றும் பொது இடங்களில் பாதுகாக்கப்பட்ட வகையில் ஒரு லட்சம் மரக் கன்றுகள் நடும் வகையில், தன்னார்வ அமைப்புகள் சார்பில் 25 ஆயிரம், பள்ளிகள் சார்பில் 25 ஆயிரம், கல்லூரிகள் சார்பில் 15 ஆயிரம், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் 15 ஆயிரம், பேரூராட்சிகள் சார்பில் 10 ஆயிரம், இதர அரசு துறைகள் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகளும் நட திட்டமிட்டு பணிகள் துவங்கப்பட்டன. அதன்படி, சனிக்கிழமை தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு லட்சமாவது மரக்கன்றை மாவட்ட ஆட்சியர் நட்டு திட்டத்தை நிறைவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறுகையில், “இத்திட்டத்தினை துவங்கி ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டோம். ஆனால், எட்டு மாதங்களில் இலக்கை எட்டி யுள்ளோம். இத்திட்டத்தில் பலரும் ஆர்வத்துடன் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். இதில், திருவையாறு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் ‘இசைவனம்’, அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரி வளாகத்தில் ‘ஆரோக்கிய வனம்’, தஞ்சாவூர் சமுத்திரம் ஏரியில் பறவைகளுக்காக ‘பறவைகள் வனம்’, கடலோர பகுதிகளில் ‘ஆழிவனம்’, திருமலைசமுத்திரத்தில் ‘விருட்ச வனம்’ என புதிதாக உருவாக்கப்படுகிறது. ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்ட இடத்தில், அந்த மரக்கன்றுகள் வளர்ந்துள்ளனவா என உறுதி செய்யப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்படும்” என்றார்.