பேராவூரணி, ஜன.11 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் கடனை திருப்பிச் செலுத்திய நிலையில், விவசாயி கடன் கட்டவில்லை என வழக்கு தொடர்ந்த வங்கி நிர்வாகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது. பேராவூரணி அருகே உள்ள கரம்பக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி திருஞானம் (60). இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு பேராவூரணி பாரத ஸ்டேட் வங்கி கிளையில் டிராக்டர் வாங்குவதற்காக ரூ. 5 லட்சம் கடன் வாங்கியிருந்தார். வாங்கிய கடனை 2011 ஆம் ஆண்டு லோக் அதாலத் மூலம் தீர்த்துவிட்டார். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு வங்கி கிளையில் அப்போது மேலாளராக இருந்த ஜெயக்குமார் என்பவர் மூலம், திருஞானம் கடனை திருப்பி செலுத்தவில்லை எனக் கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் கடன் செலுத்தியதற்கான ஆதாரங்களுடன் திருஞானம் மனு தாக்கல் செய்தார். பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பின் நுகர்வோர் நீதிமன்றம் பாரத ஸ்டேட் வங்கியின் பேராவூரணி கிளை நிர்வாகம் கடனை திருப்பி செலுத்திய விவசாயி திருஞானத்தின் அசல் ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க உத்தரவிட்டது. மேலும், கடன் அடைக்கப்பட்ட அடமான சொத்துகள் மீது உள்ள வில்லங்கத்தை நீக்கி, வரவு ரசீது பதிவு செய்து தர வேண்டும். சேவை குறைபாட்டினால் திருஞானத்திற்கு ஏற்பட்ட மன உளைச்சல், அலைச்சல், பொருள் இழப்பு ஆகியவற்றுக்கு ஒட்டுமொத்த இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். மேற்படி தொகைக்கு ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியை 8.3.2019 தேதியில் இருந்து தீர்ப்பு வழங்கிய 20.7.2022 வரை வழங்க வேண்டும். இத்தொகையை 6 வார காலத்திற்குள் வழங்க தவறும் பட்சத்தில் 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். மேலும் செலவு தொகையாக ரூ.5 ஆயிரம் வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பின் அடிப்படையில் வங்கி நிர்வாகம் நடந்து கொள்ளாததால், திருஞானம் மேல் முறையீடு செய்தார். அதில், பேராவூரணி வங்கி கிளை முன்னாள் மேலாளர் ஜெயக்குமார், தற்போதைய மேலாளர் ஆகியோர் வட்டியுடன் சேர்த்து ரூ.7 லட்சத்து 7 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், வழங்கத் தவறினால் 2023 பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் நுகர்வோர் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது.