கும்பகோணம், டிச.16 - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்-ன் தஞ்சை வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள், துணை நிர்வாகிகள் தேர்வு மற்றும் நகர பிரைமரிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் தொடர்பான மாவட்ட பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது சுல்தான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அப்துல் காசிம் ராஜாஜி வரவேற்றார். கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்புரையாற்றினார். மாநில செயலாளர்கள் ஆடுதுறை ஷாஜகான், ஜமால் முகமது, இப்ராஹிம், மில்லத் முகமது இஸ்மாயில் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பொருளாளர் ஜுல் பிகார் நன்றி கூறினார். தஞ்சை மாவட்டத்தை பிரித்து கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அறிவிக்க வேண்டும். தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தொடங்கப்பட்டு பல ஆண்டு காலமாக ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனை விரைவுபடுத்தி முடித்து தர வேண்டும். 2023 மார்ச் 9, 10 தேதிகளில் சென்னையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பவள விழா நடைபெற உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் இருக்கும் விமான நிலையங்களில் எண்ணிக்கை 74 இல் இருந்து 141 ஆக அதிகரித்துள்ளது. 2027 ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை 220 ஆக அதிகரிக்கும் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியிருக்கிறது. எனவே டெல்டா பகுதி, மையமாகவும் வியாபாரத் தலைநகராக திகழ்வதாலும், சுற்றுலா மேம்பாட்டை கருத்தில் கொண்டு மகாமகம் மற்றும் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கோவில்களுக்கு வருபவர்களுக்கு வசதியாக கும்பகோணத்தில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்களை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.