districts

img

வெள்ளத் தடுப்பு முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் தகவல்

தஞ்சாவூர், ஆக.7 -  கல்லணையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை காரணமாக கொள்ளிடம் கரையோர பகுதிகளில் வெள்ளத் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசுத் தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்ததாவது: “காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால், அணையில் இருந்து உபரி நீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 1.50 லட்சம் கனஅடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.  காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால், தஞ்சாவூர் மாவட்டத்தில், காவிரி கரையில் 56 கிராமங்களும், வெண்ணாறு கரையில் 21 கிராமங்களும், கல்லணை கால்வாய் கரையில் 30 கிராமங்களும், கொள்ளிடம் கரையில் 21 மற்றும் ஆற்றங்கரையோரம் 108 கிராமங்கள் என மொத்தம் 236 கிராமங்கள் அமைந்துள்ளன.  இதில் 3 மிக அதிக பாதிப்பு, 50 அதிக பாதிப்பு, 50 மிதமான பாதிப்பு, 92 குறைவான பாதிப்பு என மொத்தம் 195 கிராமங்களை கண்டறிந்து ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

காவிரி நீர் பாய்ந்து வரும் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன்பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடவோ வேண்டாம். தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் தன் படம் (செல்பி) எடுப்பதை தவிர்த்திட வேண்டும். கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர் அதிகம் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதால், அந்த பகுதிகளில் குழந்தைகள் விளையாடச் செல்லாமல் பெற்றோர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.  நமது மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய ஒரு மாவட்ட அளவிலான குழு, 3 கோட்ட அளவிலான குழுக்கள், 9 வட்ட அளவிலான குழுக்கள், 50 சரக அளவினால் குழுக்கள், 4,525 முதல் நிலை பணியாற்றுபவர்கள், 689 கால்நடை பராமரிப்பாளர்கள். 175 பாம்பு பிடிப்பவர்கள், 516 மரம் வெட்டுபவர்கள், 105 ஜெனரேட்டர், 170 ஜேசிபி, 8705 கம்பங்கள், 374 அறுவை மெஷின், மேலும் 96 இடங்களில் கரையை விட்டு தண்ணீர் வெளியே வராமல் இருக்க 76,165 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  இதுவரை 141 குடும்பங்களில் உள்ள 629 பேர் பாதுகாப்பாக நிவாரண முகாமில் தங்கியுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் அனைத்து வசதிகளுடன் பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் அமைக்கப் பெற்றுள்ளன. பொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்குவதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளுடன் கூடிய தற்காலிக பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் (24x7 ) இயங்கி வரும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண் 1077 மற்றும் தொலைபேசி எண்கள் 04362-264114, 04362-264115, வாட்ஸ் அப் எண். 94458 69848 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு மழை, வெள்ளத்தினால் ஏற்படும் சேதம் தொடர்பான் புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்” இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். பின்னர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர், திருவிடைமருதூர் வட்டம் வேட்டமங்கலம் மதகு மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை இணைக்கும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்தின் கட்டுமான பணியினையும், அணைக்கரை பகுதிகளில் முன்னேற்பாடு பணியினையும் ஆய்வு செய்தனர்.

;