districts

தீ விபத்தில் குடிசை வீடு சாம்பல்: கோகனட் சிட்டி லயன்ஸ் சங்கம் உதவி

தஞ்சாவூர், அக்.5 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி நாட்டாணிக்கோட்டை பகுதியில், ஆவுடையார்கோவில் சாலையில் வசிக்கும் கூலித்தொழிலாளி நீலகண்டன் (54), ஆட்டோ ஓட்டுநர் குமார் (42) ஆகிய இருவரும் சகோதரர்கள். இவர்கள் ஒரே குடிசை வீட்டில் இரு பக்கங்களில் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மின்கசிவு காரணமாக குடிசையில் தீப்பற்றியது. தகவல் அறிந்து வந்த பேராவூரணி தீயணைப்பு துறையினர், தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  இந்த தீ விபத்தில் குடிசை வீட்டின் ஒரு பகுதி எரிந்து சாம்பலானது. மேலும், வீட்டில் இருந்த டிவி, கிரைண்டர், ஆட்டோ ஸ்பேர்பார்ட்ஸ் உபகரணங்கள் நாசமாயின.  தகவல் அறிந்து வந்த நாட்டாணிக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் கருப்பையா, பேரூராட்சி கவுன்சிலர் வீ.ப.நீலகண்டன் ஆகியோர் தீ விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  லயன்ஸ் உதவி  இந்நிலையில், பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் தலைவர் எஸ்.பாண்டியராஜன், செயலாளர் எம்.எஸ்.ஆறுமுகம், பொருளாளர் சங்கர் ஜவான், மாவட்டத் தலைவர் எம்.நீலகண்டன் மற்றும் லயன்ஸ் சங்கத்தினர் பாதிக்கப்பட்ட நீலகண்டன், குமார் குடும்பத்திற்கு அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் என சுமார் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

;