districts

சிறுமியை கேலி செய்த விவகாரம் கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு ஓராண்டு சிறை

தஞ்சாவூர்,  ஜூலை 22 - 8 வயது மகளை கேலி செய்த நபரை தட்டிக் கேட்டவரை தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களுக்கு பேராவூரணி நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.  தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராசு. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை சேர்ந்த தினேஷ்குமார் (32), புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த டேவிட் (21) இருவரும் மல்லிப்பட்டினம் பகுதியில் தங்கியிருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.  இந்நிலையில் ராசுவின் 8 வயது மகளை டேவிட்டும், தினேஷ்குமாரும் கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால் அந்த சிறுமி அழுதுகொண்டே வந்து வீட்டில் கூறியுள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட ராசுவை, இருவரும் தாக்கி கத்தியைக் கழுத்தில் வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து ராசு மனைவி பிரியா அளித்த புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக பேராவூரணி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில்,  நீதித்துறை நடுவர் அழகேசன் வழக்கை விசாரித்து, இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.