districts

பெரியார் பல்கலை. முன்னாள் பதிவாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்திடக் கோரி அரசுக்கு புகார் மனு

சேலம்,மே 9- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் விசாரணை ஆவணங்களை வெளியிட்ட முன்னாள் பதிவாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க அரசு செயலருக்கு புகார் மனு அனுப்பப் பட்டுள்ளது. 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில் விசாரணை நடத்திய உயர் கல்வித்துறை அதிகாரிகள், பொறுப்பு பதிவாளராக இருந்த தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டனர். ஆனால், தங்கவேலு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அவர் ஓய்வுபெற்றார்.

இதனிடையே பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவரும், பொருளியல் துறை பேராசிரியருமான வைத்தியநாதன் குறித்த வீடியோ ஒன்றை கடந்த இருதினங்களுக்கு முன்பு, முன்னாள் பதிவாளர் தங்கவேலு வெளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்கலைக்கழகத்தின் விசாரணை ஆவணங்களை திருடி வெளியிட்டதாகவும்,முன்னாள் பதிவாளர் தங்கவேலு மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உயர்கல்வித்துறை செயலருக்கு வைத்தியநாதன் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.