பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாதென விடுக்கப்பட்ட அறிவிப்பை பல்கலைக்கழகம் திரும்ப பெற்றுள்ளது.
பெரியார் பல்கலைக்கழகத்தில் சார்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது அதில், பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் மேதகு ஆளுநர் தலைமையில் 28-06-2023 அன்று நடைபெறவுள்ளது. அச்சமயம், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்துவருவதை உறுதிசெய்யுமாறும், கைபேசிகள் எடுத்து வருவதை தவிர்க்குமாறும் சேலம் மாவட்ட காவல் துறையினர் அறிவுறுத்தலின்படி கேட்டுக்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன் என அதில் கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். அதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில்,பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாதென்றும் காவல்துறை அறிவுறுத்த வேண்டுகிறேன் என பதிவு செய்திருந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தனது முகநூல் பக்கத்தில், பெரியார் பல்கலைக்கழக வாசலில் பெரியார் கருப்பு சட்டையோடுதான் இருக்கிறார் ஆளுனரே என பதிவு செய்திருந்தார்.
இதுபோல பலரும் இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில்,பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில் கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாதென்று விடுத்த அறிவிப்பை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது.