districts

img

சேலத்தில் திமுக பிரமுகரை தாக்கிய அதிமுக வேட்பாளர் கொரோனா வார்டிலிருந்து தப்பியோட்டம்

சேலம் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர், கொரோனா வார்டிலிருந்து தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகராட்சி 58 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுபவர் பாண்டியன் (55). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன் அப்பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் சின்னையன் என்பவரை தாக்கியுள்ளார். இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அதிமுக வேட்பாளர் பாண்டியனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிபதிகள், நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய நிலையில், தனக்கு நெஞ்சு வலிப்பதாக பாண்டியன் கூறினார். இதனால், அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. உடனே அவரை கொரோனா வார்டில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பாண்டியனுக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது.

இந்நிலையில், புதனன்று இரவு சேலம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து மருத்துவர்கள் உள்பட யாரிடமும் எதுவும் கூறாமல் வேட்பாளர் பாண்டியன் தப்பிச் சென்றார். அவரை மருத்துவர்கள், செவிலியர்கள் தேடி பார்த்து விட்டு தப்பியோட்டம் என பதிவு செய்தனர். இதுதொடர்பாக அரசு மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நடைபெற்ற விசாரணையில், சேலம் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு சேர்ந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அங்கு விரைந்தனர். அப்போது, பாண்டியன் கூறுகையில், தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட கொரோனா பரிசோனையில் தனக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. அதனால், வீட்டுக்கு திரும்புகிறேன் எனக்கூறி விட்டு, அங்கிருந்து அவர் சென்றுள்ளார். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.