கடலூர், ஆக. 29- அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள், 110 நூலகர் பணியிடங்கள், 80 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் 17 அம்ச கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும், சங்கங்களை அழைத்து பேச வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் நடை பெற்ற இந்த இயக்கத்திற்கு கிளை தலைவர் முனைவர் ரா. திலக் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் முனைவர் நா. சேதுராமன், பொருளாளர் த. கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோரிக்கை மனுக்கள் உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.