districts

கைதிக்கு கஞ்சாவை கொண்டு வந்த வாலிபர் கைது

அம்பத்தூர், ஆக. 16-

     புழல் சிறையில் தண்டனை கைதி ஒருவரை சந்திக்க, சென்னை அண்ணா நகரை சேர்ந்த நவீன் குமார் (24) என்பவர் வந்தார். அப்போது அவர் தின்பண்டங்களை பையில்  கொண்டு வந்தார். வழக்கம் போல் சிறை காவல் துறையினர்  அந்தப் பையை சோதனை செய்தனர். அப்போது அதில் 10 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் நவீன் குமார் அந்த கஞ்சாவை தண்டனை சிறையில் இருக்கும்  நண்பரான கோபிநாத் என்பவருக்கு கொண்டு வந்தது தெரிய  வந்தது.

     இதையடுத்து நவீன் குமாரை காவல் துறையினர் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து  புழல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர். சிறை காவலர்கள் 20க்கும் மேற்பட்டோர் சிறையில் திடீர் சோதனை செய்தனர். அப்போது உயர் பாதுகாப்பு பிரிவு  அறை அருகே கேட்பாரற்று கிடந்த செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டு வழக்கில் கைதாகி 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற செங்குன்றத்தை அடுத்த  எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவரிடம் 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

       அதேபோல் புதுக்கோட்டையைச் சேர்ந்த பாலாஜி என்ற  கைதியிடம் 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இவர்களுக்கு சிறைக்குள் கஞ்சா, செல்போன் கிடைத்தது எப்படி என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.