சென்னை, டிச. 4 - விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரி வித்து முகப்பேரில் பெண்கள் நூதனப் போராட்டம் நடத்தினர். அத்தியாவசியப் பொருட்களின் விலை வாசியை கட்டுப்படுத்தவும், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகளின் விலைகளை குறைத்திடவும் வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் விலைவாசி உயர்வுக்கு எதிரான இயக்கத்தை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக முகப்பேர் பூங்கா அருகே, பலூன்களில் உணவுப் பொருட்களின் பெயர்களை எழுதி பறக்க விட்டனர். விலைவாசி விண்ணை நோக்கி செல்கிறது, மக்களால் எட்டிபிடிக்க முடி யாத நிலை உள்ளது என்பதை நூதனமாக வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டத்தை நடத்தினர். விலைவாசி உயர்வு சரியா தவறா? என சாலையில் இரண்டு வாக்குப்பெட்டி வைத்து வாக்கெடுப்பு நடத்தினர். கல்லூரி மாணவிகள், வியாபாரிகள் உட்பட சுமார் 100 பேர் வாக்களித்தனர். அனை வரும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர். இதனை தொடர்ந்து கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. மாதர் சங்கத்தின் முகப்பேர் கிளை சார்பில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி, செயலாளர் ம.சித்ரகலா, துணைத்தலைவர் எஸ்.பிச்சையம்மாள், மதுரவாயல் பகுதிச் செயலாளர் சித்ரா, பொருளாளர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் பேசினர்.