districts

img

ஆறுவழிச் சாலை: ஆட்சியரின் எழுத்துபூர்வ ஒப்பந்தம் என்னாச்சு!

திருவள்ளூர், பிப்.28- தச்சூர் முதல் சித்தூர் வரை ஆறு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தில், மாவட்ட ஆட்சியர்  போட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் புதனன்று (பிப் 28), பள்ளிப்பட்டு தபால் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆந்திரா மாநிலம், சித்தூரில் தொடங்கி,  திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் கீளப்பூடி. மேலப்பூடி  புண்ணியம், பெருமாநல்லூர், திருமலை ராஜூ பேட்டை,  நெடியம் ஆகிய கிராமங்கள்  வழியாக பொன்னேரி அருகில் உள்ள தச்சூர் கூட்டுச்சாலை வரை 6 வழிச்சாலை அமையவிருக்கிறது. இதற்கான பணிகள் இரவு பகலாக இப்பகுதிகளில் மும்முரமாக நடந்து வரு கிறது. இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் பல  கட்ட போராட்டங்களை நடத்திய பிறகு,  கடைசியாக மாவட்ட நிர்வாகம் பேச்சு நடத்தியது. கடந்தாண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில் இந்த திட்டத்தால் நிலத்தை  இழக்க  கூடியவர்களுக்கு கூடுதலாக மூன்று மடங்கு மற்றும் நான்கு மடங்கு இழப்பீடு வழங்கப்படும். மரம், செடி, கொடி ஆகியவற்றுக்கு நியாயமான முறையில் இழப்பீடு வழங்கப்படும் என அவர்  எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்திருந்தார். ஆட்சியர் போட்ட ஒப்பந்தத்தை தேசிய  நெடுஞ்சாலை துறை ஆணையம் ஏற்கவில்லை. இதனால் விவசாயிகள் பெரும்  சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  இழப்பீடு தராமல்  விவசாயிகள் நிலத்தில் சாலை அமைக்கும் பணியை சட்ட விரோதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சாலை போடும் பணியை நிறுத்தவும்,  மாவட்ட ஆட்சியர்  போட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த குடியிருப்போர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. அதுவரை  சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்  துறையினர் நிறுத்த வலியுறுத்தி பள்ளிப்பட்டு தபால் நிலையம் முன்பு புதனன்று  (பிப் 28), ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு  விவசாயிகள் சங்கத்தின் பகுதி துணைச் செயலாளர் நந்தகுமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் ஜி.சம்பத்,   சி.பெரு மாள்,  ஜெயச்சந்திரன், பகுதி நிர்வாகிகள்  குப்பன்,  ஏழுமலை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.