திருவண்ணாமலை,பிப்.6- பெரணமல்லூர் பகுதியில் துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம் என சிபிஎம் வேட்பாளர் மக்களிடம் நம்பிக்கை தெரிவித்தார். இம் மாதம் 19 ஆம் தேதி நடை பெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டம் பெரண மல்லூர் பேரூராட்சியில் 49 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனையில், ஒரு வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு 48 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக மா. கௌதம் முத்து வார்டு எண் 1-இல் போட்டியிடுகிறார். அவர், தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வீதி வீதியாக மக்களை சந்தித்து ஆதரவு கோரினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ந.பாண்டுரங்கன், வந்தவாசி தொகுதி யின் சட்டமன்ற உறுப்பினர் அம்பேத் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பெரணமல்லூர் சேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் சிபிஎம் வேட்பாளருக்கு வீடு வீடாக ஆதரவு திரட்டினர். இந்த பிரச்சாரத்தின்போது உரையாற்றிய சிபிஎம் வேட்பாளர் ,“பெரணமல்லூர் பகுதியில் செயல்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன்” என வாக்குறுதி கொடுத்தார்.