ராணிப்பேட்டை, ஜூன் 4 - ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த ஜூன் 1 முதல் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை நடத்தக் கோரி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலை யில் சங்க நிர்வாகிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு காணப்பட்டதையொட்டி தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி வாலாஜா நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 1ஆம் தேதி முதல் பணி புறக்கணிப்பு போராட்டம் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதியிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வாலாஜா நகராட்சி ஆணையர் ஆர்.பரந்தாமன், நகர மன்றத் தலைவர் தில்லை அரணி ஆகியோர் சங்க நிர்வாகிகளுடன் சனிக்கிழமை (ஜூன் 3) பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் 10,500 ரூபாய், இஎஸ்ஐ, வருங்கால வைப்பு நிதி, குழு காப்பீடு போன்றவற்றிற்கு மாதம் 1,500 வங்கியில் செலுத்துவது என உறுதி அளித்துள்ளனர். மேலும் தொழிலாளர்களுக்கு சேனிடைசர், முகக்கவசம், கையுறை, வருடத்திற்கு இரண்டு செட் சீருடை, மூன்று மாதத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை முகாம். வருடத்திற்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம், வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று அரை நாள் விடுமுறை அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர். பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதையொட்டி தொழிலாளர்கள் அனைவரும் போரட்டத்தை கைவ்பிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) முதல் பணிக்கு சென்றனர். இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளர் எம்.காசி, ராணிப் பேட்டை உள்ளாட்சி துறை மாவட்டச் செயலாளர் ஏபிம்.சீனிவாசன், நிர்வாகி பாக்யராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.