ராணிப்பேட்டை, ஜன. 6 – ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், பாண்டியநல்லூர், சோம சமுத்திரம் ஆகிய இரண்டு கிராமப் பகுதிகளை சோளிங்கர் நகராட்சியில் இணைக்கப்படுவதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பொதுமக்கள் இசைவு இன்றி நடைபெறும் இந்த இணைப்பை எதிர்த்து திங்களன்று (ஜன. 6) மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவிடம் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில், இங்கு வாழக்கூடிய 65 விழுக்காடு பொதுமக்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு 100 நாள் திட்டத்தில் பணி செய்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில் எங்களை நகராட்சியில் இணைத்து விட்டால் சொத்து வரி, குழாவரி உள்ளிட்டவற்றை கட்ட பொருளாதார சிரமம் ஏற்படும் என தெரிவித்துள்ளனர். எனவே ஊராட்சியாகவே இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் விவசாய சங்க சோளிங்கர் வட்டாரத் தலைவர் தாமோதரன், செயலாளர் நிலவு குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.