விழுப்புரம், ஆக.24- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம்,வீடூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டத்தை முறையாக நடத்தாததை கண்டித்து மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வீடூர் ஊராட்சி மன்றத்தில் ஆக.15 அன்று சட்டத்திற்கு புறம்பாக கிராம சபை கூட்டத்தை நடத்திய மயிலம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், விக்கிர வாண்டி காவல் உதவி ஆய்வாளர், ஊராட்சி செயலாளர் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி யில் 100 நாள் வேலை நடத்தாமல் தலித் மக்களை புறக்கணிக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் பயனாளிகள் தேர்வு செய்ய வேண்டும், ஊராட்சி மன்ற தெருக்களில் குடி தண்ணீரில், கழிவுநீர் கலப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலம் ஒன்றியச் செயலாளர் ஜி.ராஜேந்திரன், திண்டிவனம் வட்டச் செயலாளர் டி.ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.